வேலூர், ஆகஸ்ட் 29 –
வேலூர் மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூன்றாவது நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை அருகில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.
ஊர்வலத்திற்கு முன்பாக 2 யானைகள் முன் செல்ல பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பின் தொடர்ந்து சென்றன. 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊர்வலம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கி சைதாப்பேட்டை, மெயின் பஜார், லால் பஜார், கோட்டை சுற்றுச்சாலை மற்றும் சேண்பாக்கம் சர்வீஸ் சாலை வழியாக சென்று சதுப்பேரி ஏரியை அடைந்தது. சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டது.



