தூத்துக்குடி, செப்.04.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி வடகால் கடைமடை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடியவர்களை அடக்குமுறையின் மூலம் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தண்ணீர் திறப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அதன் காரணங்களை அதிகாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஜனநாயக நடைமுறை என்றும் சித்ராங்கதன் கூறியுள்ளார். காவல்துறையை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்குவதற்கு பதிலாக, விவசாயிகளின் பாசன நீர் பிரச்னைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



