விழுப்புரம், ஆகஸ்ட் 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக செஞ்சி பேரூராட்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத்துறைகளும் முதன்மைத் துறைகளாக விளங்கிடும் வகையில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.128.45 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்துள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் செஞ்சி பேரூராட்சி பகுதியில் 15.25 கோடி மதிப்பீட்டிலும் மரக்காணம் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் ரூ.13.85 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறந்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து செஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை குத்துவிளக்கு ஏற்றி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மெக்கானிக் மோட்டார் வண்டி, சென்ட்ரல் ஏர் கண்டிஷன் பிளான்ட் மெக்கானிக், டெக்னிஷியன் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் ரிப்பேர், கம்ப்யூட்டர் எய்டெட் எம்பிராய்டரி மற்றும் டிசைனிங் போன்ற பாட பிரிவுகள் என 120 காலியிடங்கள் உள்ள நிலையில் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலே 120 மாணவ, மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்கா இருக்கும் நிலையில் மேலும் இரண்டு தொழிற்பேட்டைகள் வரவுள்ளது. எனவே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பில் சேர்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் எனவும், தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல. ஆகாஷ், செஞ்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரா. விஜய்குமார், வல்லம் ஒன்றிய குழு உறுப்பினர் அமுதா இரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம். மொக்தியார் அலி, ஒன்றிய குழு உறுப்பினர் எல்.பி. நெடுஞ்செழியன், அனந்தபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பரமேஸ்வரி, செஞ்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் சிவ நடராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அரங்க ஏழுமலை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



