விளாத்திகுளம், ஆகஸ்ட் 16 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் மொத்தம் 11 ஜோடி மாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. சின்ன மாட்டு பந்தயத்திற்கு போக வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு போட்டிக்கு போக வர 5 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.
பொதுவாக போட்டிகளில் முதலில் நான்கு இடம் பிடிக்கும் மாட்டு வண்டிகளுக்கு பரிசு வழங்குவது வழக்கம். ஆனால் இன்று போட்டியில் கலந்து கொண்ட 11 மாட்டு வண்டி உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதி பின் சாரதி, கொடி வாங்கிய சாரதி, கொடிகொடுத்த சாரதி என அனைவருக்கும் பரிசுத்தொகை, சுழற்கோப்பை வழங்கி கௌரவித்தனர். முதல்முறையாக மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறைந்த அளவு மட்டுமே மாட்டு வண்டிகள் வந்ததால் அக்கிராம மக்கள் சிறிது ஏமாற்றம் அடைந்தாலும் கிராமத்தில் வந்து மாடுகளை இறக்கி போட்டியில் கலந்து கொண்ட மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதி பின் சாரதிகளை உற்சாகப்படுத்தும் விதமாக 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மக்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வாரத்தில் 5 நாட்கள் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்று வருவதால் இன்று குறைந்த அளவிலே மாட்டுவண்டிகள் போட்டியில் இறங்கியதாகவும் அடுத்தாண்ட மாட்டுவண்டி பந்தயக்காரர்கள் மாட்டுவண்டி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அச்சங்குளம் கிராமத்தில் மிகப் பிரமாண்டமாக மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்தப்பட உள்ளதாக அச்சங்குளம் கிராம விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.



