நாகர்கோவில், ஆகஸ்ட் 30:
குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நாளையும் நாளை மறுநாளும் நடக்கிறது. இதையொட்டி இரண்டு நாட்களும் நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருக்கிறது.
இது குறித்து காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகராஜா கோயில் அருகில் இருந்து தொடங்கும் ஊர்வலம் மாநகரின் முக்கிய சாலைகள் ஆன அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி, வடசேரி, மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோட்டாறு, செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் கோயில் சந்திப்பு, பீச் ரோடு, ஈத்தாமொழி விளக்கு ரோடு வழியாக சொத்தவிளை மற்றும் சங்குதுறை கடற்கரைக்கு செல்ல இருக்கிறது.
இரு தினங்களிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வெளியூர் செல்பவர்கள், ரயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து துவங்கிய பின்பு ஊர்வல பாதையில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. பார்வதிபுரம் மற்றும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கிருஷ்ணன் கோவில், வடசேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் வடசேரியில் இருந்து புத்தேரி ரோடு, அப்டா மார்க்கெட் வழியாக நான்கு வழி சாலையில் செல்ல வேண்டும்.
கோட்டார், செட்டிகுளம், ராமன் புதூர், பால்பண்ணை, பார்வதிபுரம், வடசேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி, அஞ்சு கிராமம், கூடங்குளம் செல்லும் வாகனங்கள் டெரிக் ஜங்ஷன், அனந்தன் பாலம் சாணல்கரை, கோணம் ஆற்றுப்பாலம் சானல்கரை, தொல்லைவிளை சானல்கரை, வல்லன்குமரன் விளை , வேதநகர், பறக்கை வழியாக செல்ல வேண்டும். அல்லது ராமன் புதூர் ஆயுதப்படை ரோடு, பட்டகசாலியன் விளை, இருளப்பபுரம், பறக்கை சந்திப்பு, நாயுடு மருத்துவமனை வழியாக செல்ல வேண்டும்.
நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் வடசேரி, புத்தேரி ரோடு, அப்டா மார்க்கெட் ரோடு, புதுகிராமம், தேரூர், சுசீந்திரம், சமாதானபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையலாம். கோட்டாறு ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அனந்தன் பாலம், சானல்கரை, கோணம் சானல் கரை, தொல்ல விளை சானல் கரை, வல்லன் குமரன்விளை சானல்கரை, இளங்கடை, பரக்கை ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி, அஞ்சு கிராமம், கூடங்குளம் உள்ளிட்ட வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து செயல்படும். நாளையும் நாளை மறுநாளும் இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும். சிலை ஊர்வலம் தொடங்கியதில் இருந்து மாலை 6 மணி வரை அல்லது சிலை ஊர்வலம் முடியும் வரை இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


