களியக்காவிளை, ஜன. 9 –
களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை பேருராட்சிக்கு சொந்தமான எடை மேடை ஒற்றாமரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த எடை மேடையில் தினக்கூலி அடிப்படையில் பேரூராட்சி பணியாளர்கள் நேரடியாக நடத்தி வருகின்றனர். பேருராட்சி செயல் அலுவலர் திடீர் என எடை மேடையை மன்ற ஒப்புதல் இல்லாமல் டெண்டர் கொடுத்துள்ளார்.
வழக்கமாக பேரூராட்சி மன்ற அனுமதியுடன் டெண்டர் கொடுப்பது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக செயல் அலுவலர் தண்ணிசையாக செயல்பட்டு எடை மேடையை டெண்டர் கொடுத்துள்ளார். ஆகவே இதனை கண்டித்து பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமையில் 5-வது வார்டு உறுப்பினர் தாஸ், 2 – வது வார்டு உறுப்பினர் விஜயா, 14-வது வார்டு உறுப்பினர் குணசீலன், 3-வது வார்டு உறுப்பினர் ரிபாய் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏலத்தை ரத்து செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என பேரூராட்சி தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.



