கன்னியாகுமரி, ஜூலை 11 –
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய நூலகம் திறப்பு விழா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 3 லட்சம் மதிப்பிலான டெஸ்க், பெஞ்ச், கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேட்டுக்குடி முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பிஸ்ஷி. பி.றேனி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், தொழிலதிபருமான ஜெஸீம், கவுன்சிலர்கள் வீடியோகுமார், ஜோஸ்திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளி மற்றும் புனித ஸ்டெல்லாஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வக்கீல் ஜெபில் வில்சன் கலந்து கொண்டு தனது சொந்த நிதியில் கட்டி வழங்கிய நூலகத்தை திறந்து வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது: இது போன்ற பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொள்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. காரணம் ஒரு மனிதனுடைய மகிழ்ச்சி என்பது இளமையான இந்த பள்ளி பருவமாகும். இந்த அரசு பள்ளியானது தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக விளங்கி வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேட்டுக்குடி முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோருக்கும் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்து வரும் ஜவஹர் ஸ்டோர் உரிமையாளர் தொழிலதிபர் ஜெஸீம், கவுன்சிலர்கள் வீடியோ குமார், ஜோஸ்திவாகர் ஆகியோரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அவ்வப்போது பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டி கௌரவிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது ஆர்வம் மற்றும் திறமை ஆகியவை வெளிப்படும். நான் மாணவர்களின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து தருவேன் என இந்த நேரத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே ஒவ்வொரு மாணவர்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நன்றாக படித்து மருத்துவத் துறை, பொறியியல் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி படித்த பள்ளிக்கும், பிறந்த ஊருக்கும், பெற்றோருக்கும், கற்று தந்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என உங்களை நான் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள டெஸ்க், பெஞ்சு மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேட்டுக்குடி முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன் ஆகியோர் பள்ளிக்கு வழங்கினர். நிகழ்ச்சிகளை ஆசிரியர் தீபா தொகுத்து வழங்கினார். ஆசிரியை லதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



