கிருஷ்ணகிரி, ஆக.26:
போச்சம்பள்ளி அருகே அகரம் அடுத்த பட்டகரஅள்ளி வன்னியர் குட்டை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயபெருமாள் மற்றும் ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த சில நாட்களாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயபெருமாள் மற்றும் ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் சுவாமிகளின் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்வை காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். புனிதநீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டபோது பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…”, “ஜெய் ஸ்ரீராம்…” என பக்தி முழக்கங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.
பக்தர்கள் அதிகளவில் திரண்டதையொட்டி, நாகரசம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.



