சென்னை, ஜூன் 16 –
குழந்தைகளுக்கு அதிநவீன மருத்துவ சேவையை அளிக்கும் விதமாக, சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை அசண்ட் (ACENT ) என்னும் பிறந்த குழந்தைகள் சிறுவர்களுக்கான செவித்திறன், சுவாசப் பாதை தூக்கக் குறைபாடுகளுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இம்மையத்தின் அறிமுக விழாவில், பிரபல பின்னணிப் பாடகி சைந்தவி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனையின் இ .என்.டி மூத்த நிபுணர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
குறிப்பாக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுவாசப் பாதையை மயக்க மருந்து கொடுக்காமல் பரிசோதிக்க, மிக மெல்லிய 1.2 மி.மீ குழந்தைகளுக்கான எண்டோஸ்கோப்புகளைப் பயன்படுத்தும் சென்னையின் முதல் மையம் அசண்ட் ஆகும்.
இந்த தொழில்நுட்பம், புறநோயாளிகள் பிரிவிலேயே மிகச் சிறிய சுவாசப் பாதைகளைக் கூட மருத்துவர்கள் பாதுகாப்பாக பரிசோதிக்க உதவுகிறது. இதனால் சிக்கலான இ.என்.டி பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிகிறது.
இது குறித்து சென்னை ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் குழுமத் தலைவர் குணசேகர் கூறுகையில், “எங்கள் மருத்துவமனையில், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களின் ஆதரவுடன் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சையை வழங்குவதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. இந்த “அசண்ட்” மையம் அறிமுகம் என்பது, குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சையை வழங்க வேண்டும் எங்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது .
நோயைக் கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பதில் தொடங்கி, குணமடைவது மற்றும் மறுவாழ்வு அளிப்பது வரை, இந்த மையத்தின் ஒவ்வொரு அம்சமும் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் தனித்துவமான தேவைகளை மனதிற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் குழந்தைகளுக்கான இ.என்.டி நிபுணர் மற்றும் டாக்டர். நித்யா கூறுகையில், “குழந்தைகளுக்கு ஏற்படும் பல இஎன்.டி பிரச்சனைகள் பெரும்பாலும் தற்காலிகமானவை என்று அலட்சியப்படுத்தப்படுகின்றனர். ஆனால் உண்மையில் அவை குழந்தையின் செவித்திறன், பேச்சு, தூக்கம், கற்றல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பிரச்சனைகளை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ, அந்த அளவுக்கு நம்மால் சிறந்த சிகிச்சையை அளித்து நல்ல முடிவுகளைக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தார்.



