நாகர்கோவில், மே 25 –
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வலம்புரிவிளை உரக் கிடங்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் முக்கிய பகுதியான பீச் ரோடு சந்திப்பு அருகே வலம்புரிவிளை உரக் கிடங்கு சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலிருந்தும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கேயே கொட்டப்படுகின்றன.
சுத்திகரிப்பு நிலையம் இருந்தாலும், அந்த பகுதியில் 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. அடிக்கடி அந்த இடத்தில் தீப்பற்றி கொள்வதும் உண்டு. இந்த உரக்கிடங்கைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் மூச்சுத்திணறலுடன் பலவிதமான நோய்களுக்கும் உட்பட்டு வருகிறார்கள்.
இப்பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வியபார நிறுவனங்கள், கோயில்கள் உள்ளன. இந்த உரக்கிடங்கை மாற்றுவதற்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தாலும், இதுவரையிலும் குப்பைக்கிடங்கை மாற்றுவதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ளவில்லை. எனவே தாங்கள் வலம்புரிவிளை உரக் கிடங்கை புறநகர் பகுதியில் மாற்றிட உரிய நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



