ராமநாதபுரம், ஆக. 12 –
உயிர்ம வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பாக சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஆகஸ்ட் 14 அன்று நடைபெற உள்ளது. இக்கண்காட்சி குறித்து இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திரு. ம.தி. பாஸ்கர மணியன் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டம் வேளாண்மைத்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை குறித்த சிறப்பு கருத்தரங்கு இராமநாதபுரத்தில் உள்ள எம்.ஜி. திருமண மஹாலில் 14.08.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் உயிர்ம வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதன் அவசியம், மண்வளம், உயிர்ம உரம், உயிரியல் காரணிகள் மூலம் பயிர் பாதுகாப்பு முறைகள், விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்பு மற்றும் உயர்ம சான்று உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. உயிர்ம வேளாண் உற்பத்தியாளர்கள், கொள்முதல் செய்வோர் சந்திப்பு, விவசாயிகள் – வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


