கிருஷ்ணகிரி, ஜூலை 1 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய ஜோகிப்பட்டியில் மா விவசாயிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், விவசாய சங்கத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஊத்தங்கரை ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மா விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமாக, ஆண்டுதோறும் கிருஷ்ணகிரியில் நடைபெறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சியை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 38 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மா விவசாயிகள், தற்போது அரசின் போதிய ஆதரவு இல்லாததால் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் அரசு மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.



