கன்னியாகுமரி மே 8
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மேம்பாலம் அமைக்க முடிவு செய்து நவீன தொழில் நுட்பத்துடன் பம்மம் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.222 கோடி செலவில் கட்டப்பட்ட தமிழகத்தில் முதல் இரும்புப்பாலமாகும். இந்த மேம்பாலத்தில் 112 ராட்சத தூண்கள் உள்ளது. இதில் 21 தூண்கள் கான்கிரீட்டால் ஆனவை. மற்ற தூண்கள் அனைத்தும் இரும்பால் ஆனவை.இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு வாகன போக்குவரத்து தொடங்கியது முதலே பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தது. அதிலும் குறிப்பாக பாலம் அதிர்வதாகவும், ஊஞ்சல் போல் ஆடுவதாகவும், மேம்பாலத்தின் சாலை சமமாக இல்லை என்றும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்திருந்தனர். இந்த பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது முதல் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடி குறைய தொடங்கியது. பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக லாரிகள் வரிசையாக பாலத்தில் நின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலம் தொடங்குகின்ற பம்மம் பகுதியில் 100 மீட்டர் தொலைவில் சாலையின் மையப்பகுதியில் 2 மீட்டர் விட்டத்தில் சிமெண்ட் கலவை உடைந்து விழுந்தது. ஆனால் சாலையின் தூண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்கமாக செல்கின்ற போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பஸ்கள் அனைத்தும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக இயக்கப்பட்டது. இதனால் மார்த்தாண்டத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது பற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர். அதனை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் என்னென்ன நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மார்த்தாண்டம் பாலம் கட்டிய பிறகு சரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை. பாலத்தின் மேல் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது எனவே வாகனங்கள் அச்சமின்றி மேம்பாலம் வழியாக கடந்து செல்ல மேம்பாலத்தின் உறுதி தன்மையை சிறந்த வல்லுனர்களைக் கொண்டு உறுதி செய்ய வேண்டும் அப்போதுதான் பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.



