மார்த்தாண்டம், ஏப். 18 –
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தொடர் விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்று விளம்பர பலகை அமைத்தும் சாலையில் நடுவே ஓவர் டேக் செய்ய தடை விதித்து இரண்டு மஞ்சள் கோடுகளை வரைந்தும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன் காரணமாக விபத்துக்கள் குறைந்தது.
ஆனால் அரசு பேருந்துகள் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்தில் பயணம் செய்வது தொடர்ந்து வருகிறது. தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகனங்கள் மேம்பாலத்தில் பல்வேறு இடங்களில் ஓவர் டேக் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அத்துமீறி குறிப்பாக இரட்டை மஞ்சள் கோட்டை தாண்டி ஓவர் டேக் செய்து அதிவேகமாக பயணிக்கும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளால் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குமரி மாவட்டத்தில் இதுவரை பதியப்படவில்லை என்பதும் அதனால் இது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டும் பொருட்டு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்கள் மீதும் காவல்துறை பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



