நாகர்கோவில், ஏப். 24 –
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட தக்கலை அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 253ல் நேற்று காலை முன்னாள் சுயேட்சை எம் எல் ஏ பாலச்சந்தர் (73) என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது அவர், தான் ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களித்த நிலையில் அதற்கு மாறாக வேறொரு சின்னத்தில் விளக்கு எரிந்ததாக புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த உடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அழகுமீனா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினார். தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதி இயந்திரம் விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டெஸ்ட் ஓட்டு பதிவு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் முன்னாள் எம்எல்ஏ பாலச்சந்தர் தெரிவித்தது தவறான தகவல் என்பதும், இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. தவறான புகாரை அளித்து வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்திய அவரை போலீசார் தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அந்த வாக்குச்சாவடி தேர்தல் அலுவலராக இருந்த ஜெயசுதா (55) என்பவர் தக்கலை போலீசில் அளித்தார். புகாரில் முன்னாள் எம்எல்ஏ பாலச்சந்தர் வாக்குச்சாவடியில் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் எண்ணத்துடனும், கலகம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதமாக தேர்தலுக்கு இடையூறு செய்ததாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் பாலச்சந்தர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


