மயிலாடுதுறை, ஆக. 25 –
மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏஆர்எஸ் மதியழகன் தலைமை வகித்தார். பொருளாளர் ரவிச்சந்திரன், செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவள பயிற்சியாளர் யுகாசரண் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பட்டய தணிக்கையாளர் பெர்னார்டு, வழக்குரைஞர் ராஜ்மோகன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தினர்.
புதிய தலைவராக எம். முகம்மது ரியாஜ், செயலராக செந்தில், பொருளாளராக என்.எச்.எஸ்.ரமேஷ், துணைத்தலைவராக கிரிஜா விஸ்வநாதன், இணை செயலாளராக ஜி. ஸ்ரீகாந்த் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில், நகரில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்க அதிகரித்து வரும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், மயிலாடுதுறை நகரில் புதை சாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், மாப்படுகை, நீடூர் ரயில்வே கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும், புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடன் தொடங்க வேண்டும், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும், நகரில் முக்கிய பகுதிகளில் ஒருவழிப் பாதையை போக்குவரத்து போலீஸார் சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் தீவிபத்தில் சேதடைந்த தையலகத்தின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதில், ஏ. தமிழ்ச்செல்வன், எம்.என். ரவிச்சந்திரன், பாண்டுரெங்கன் வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். புதிய செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.



