தஞ்சாவூர், மே 18 –
தஞ்சாவூரில் நடைபெற்ற கல்வி காவலர் பூண்டி கி. துளசி ஐயா வாண்டையார் 5ம் ஆண்டு நினைவு வேந்தல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஓய்வு பெற்ற காவல் துணை கண்காணிப் பாளர் விஜயராகவன், கைத்தறி துறை ஓய்வு பெற்ற துணை இயக்குனர் டி எஸ் கே ராஜசேகர் மதிமுக தெற்கு மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தி பேசினார்கள்.
கல்வி உதவித்தொகை வழங்கி புகழஞ்சலி செலுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். முன்னதாக மேனாள் கல்லூரி முதல்வர் உரு. ராஜேந்திரன் தொகுப்புரை வழங்கினார்.
மேனாள் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக வழக்கறிஞர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியதாவது: சமூக நீதி, மதசார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு, தமிழக வாழ்வாதாரங்களை காக்கும் கடமையை ஆகியவற்றில் எள்ளளவும் பிசகாமல் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி நடத்த வேண்டும். மத்திய அரசின் பி. எம். ஸ்ரீ. திட்டத்தையோ, மும்மொழி திட்டத்தையோ முந்தைய திமுக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை அதே நிலைப்பாட்டை தான் இந்த அரசின் பின்பற்றும் என நம்புகிறேன், பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். அதை மீறி மத்திய அரசு திணித்துக் கொண்டே வருகிறது. 23 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் எழுதிய நிலையில் வினாத்தாள் வெளியாகி, அவர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவி விலக வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணி வெற்றி பெறும். நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் செப்பேடுகளுக்கு முந்தைய தொன்மை செப்பேடுகள் சோழ மண்டலத்திலேயே பல இடங்களில் இருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றார் வைகோ.



