மதுரை, ஜூலை 08 –
மதுரை மாவட்டம் விளாச்சேரியில் செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்த
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி என்ற இயற்பெயற் கொண்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் 06.07.1870 அன்று பிறந்தார். இளமை முதலே இலக்கண இலக்கியங்களையும், ஆங்கிலம் மற்றும் தத்துவ நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்தவர். மேலும், சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ்மொழி நீக்கப்பட்ட போது அதை மீண்டும் சேர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழுக்குப் பெருமை சேர்த்த பரிதிமாற் கலைஞர் தமது 33-ம் வயதில் 1903-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ம் நாள் இயற்கை எய்தினார்.
அருந்தமிழ் மொழியைச் செம்மொழி என நிலைநாட்ட பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக மதுரை மாவட்டம் விளாச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம், நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னாரது பிறந்த நாளான ஜூலை 6-ம் தேதியன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, சேடபட்டி மு. மணிமாறன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ. சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வா.பெ. வினோத் மற்றும் பரிதிமாற்கலைஞர் குடும்பத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



