திருவண்ணாமலை, பிப். 10 –
பொது விநியோக திட்டத்திற்கென தனி துறை உருவாக்கிட கேட்டு நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் ஆர்.அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இரா.சண்முகம், மாவட்ட துணை தலைவர் எம்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.மகாதேவன் அனைவரையும் வரவேற்றார்.
மாநில செயலாளர் ஏ.சி.சேகர் கண்டன உரையாற்றினார்.
பொதுவிநியோக திட்டத்திற்கென தனி துறை உருவாக்கிட வேண்டும், அனைத்து நியாயவிலைக்கடைகளுக்கும் எடையாளர் நியமனம் செய்யப்பட வேண்டும், தாயுமானவர் திட்டத்திற்குள்ள பிரச்சனைகள் களையப்பட வேண்டும், அனைத்து நியாயவிலைக்கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும், ஓய்வுபெற்ற நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், மகளிர் நியாயவிலைக்கடையை அரசே நடத்தி அப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும், சரியான எடையில் அத்தியாவசிய பொருட்கள் பொட்டலமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் எஸ்.தனசேகர் நன்றி கூறினார்.



