நாகர்கோவில், ஜுன் 1 –
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து விவசாயிகளின் பாசன வசதிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.செல்லசாமி (பத்மநாபபுரம்), ந.தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), எஸ்.ஆஸ்டின் (நாகர்கோவில்) ஆகியோர் முன்னிலையில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் குமரி மாவட்ட விவசாயத்திற்காக பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, சிற்றார்-I மற்றும் சிற்றார்-II அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நெல் சாகுபடி, வாழை சாகுபடி, தென்னை சாகுபடி, காய்கறி சாகுபடிக்கு பயன்படுகிறது.
கோதையாறு கால்வாயில் 64 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பட்டணங்கால்வாயில் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இன்றைய தினம் நீர் திறக்கப்படுவதால் பயன்பெறும் குளங்கள் மற்றும் நேரடி பாசனம் மூலம் விவசாயிகள் பயனடைவதோடு ஒரு உற்பத்தி திறன் மற்றும் மொத்த உற்பத்தியை அதிகப்படுகிறது. விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, வேளாண்மை இணை இயக்குனர் வாணி, விவசாய சங்க பிரதிநிதிகள் வின்ஸ் ஆன்றோ, தாணுபிள்ளை, செண்பக சேகர பிள்ளை, அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



