மார்த்தாண்டம், ஜூன் 26 –
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குட்டிக்காட்டு விளை, பாகோடு பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மகன் ஜெபின். இவர் தனக்கு சொந்தமாக உள்ள சுமார் 8 சென்ட் நிலத்தில் கட்டியுள்ள வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பித்து உள்ளார். இது தொடர்பாக கடந்த 19-06-2025 அன்று பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளர் விஜி வீட்டின் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது வழங்க 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெபின் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரை அணுகி நடந்ததை எடுத்துக் கூறி புகார் அளித்துள்ளார். எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 2000 ரூபாயை அவரிடம் கொடுத்து இதை லஞ்ச பணமாக கொடுக்க ஆலோசனை வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட ஜெபின் இளநிலை உதவியாளரான விஜியை சந்தித்து ரசாயனம் தடவிய 2000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார். அதனை இளநிலை உதவியாளர் விஜி பெறும்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்று அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.