தருமபுரி, ஜனவரி 27 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பூதனஅள்ளி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பூதனஅள்ளி மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஊராட்சி செயலாளர் ரூபாவதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வையாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தர்மராஜ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி பொதுமக்கள் பூதனஅள்ளி ஊராட்சிக்கு வந்த வளர்ச்சி திட்ட நிதியை திருப்பி அனுப்பிய அதிகாரிகளை கண்டித்தும், தருமபுரி நகராட்சி குப்பை கழிவுகளை பூதனஅள்ளி ஊராட்சிக்கு கொண்டு வரும் திட்டத்தை கைவிடக்கோரியும், ஊராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரியாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
சுமார் மூன்று மணி நேரம் சிறைபிடிப்பு சம்பவத்திற்கு பின்பும் அதிகாரிகள், பொதுமக்களின் எந்த கேள்விக்கும் பதில் கூற முடியாமல் திணறினர். இதனை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக நடந்த கிராம சபை கூட்டம் தொடர்பாக எந்தவித தீர்மானத்தையும், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை எழுதக்கூடாது என வலியுறுத்தி, ஊராட்சி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை முற்றிலும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பொதுமக்கள் வெளிநடப்பு செய்த கிராம சபை கூட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கிடந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரும் அங்கிருந்து பொதுமக்களிடம், எதுவும் சொல்லாமல் கிளம்பி சென்றனர் .
மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை எங்களது ஊராட்சியில் அதிகாரிகள் எந்த கிராம சபை கூட்டத்தையும் கூட்டக்கூடாது. அவ்வாறு மீறி கிராம சபை கூட்டத்தை கூட்டினால் எங்களது கிராம மக்கள் ஒன்றிணைந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் எங்களது ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்காத தமிழக அரசை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலை எங்களது ஊராட்சி பொது மக்கள் புறக்கணிப்பர்கள் என்று தெரிவித்தனர்.



