சங்கரன்கோவில், பிப். 26 –
தென்காசி மாவட்டம் மேல நீலிதநல்லூர் ஒன்றியம் பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. பள்ளிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பாண்டியாபுரம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் சிறந்து விளங்கும் ஓர் பள்ளியாக அரை நூற்றாண்டு கடந்தும் நாளது வரை செயல்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்திலே இரண்டாவது முறையாக முறையாக, தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சுமார் 1 இலட்சம் மதிப்பில், பேரணியாக சென்று இன்று கல்விச்சீர் வழங்கப்பட்டது. இதில் பள்ளிகளுக்கு தேவையான தளவாடச் சாமான்கள், ஆசிரியருக்கான ஷேர், பள்ளிக்கு தேவையான சாக்பீஸ், பேப்பர், மாணவர்களுக்கு தேவையான நோட், எழுது பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் என அனைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
பேரணியை, வட்டாரக் கல்வி அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.கொண்டுவரப்பட்ட 1 லட்சம் மதிப்பாலான சீர்வரிசை பொருட்களை தலைமை ஆசிரியர்களான இளையபெருமாள் மற்றும் ஸ்டீபன் ஞானராஜ் ஆகியோர்களிடம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளிக்கு முப்பெரும் விழாவான கல்விச்சீர் திருவிழா மற்றும் பள்ளி ஆண்டு, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மேலநீலிதநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் இராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், வெள்ளாளங்குளம் ஊராட்சி, பாண்டியாபுரம் குடியிருப்பு மக்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



