மார்த்தாண்டம், ஏப். 2 –
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி. இவர் பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் கூட்டுறவு சங்கம் ஊழியருக்கு வழங்க வேண்டிய சரண்டர் பணம் ஒன்றரை லட்சத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்லச்சாமி குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஊழியருக்கு கிடைக்க வேண்டிய தொகையை உடனே செலுத்துமாறு கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இருந்தும் கூட்டுறவு சங்கத்தினர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் நீதிமன்றம் சென்ற செல்லசாமிக்கு சேர வேண்டிய சரண்டர் பணம் ஒன்றரை லட்சம் மற்றும் இதுவரை உள்ள வட்டி சேர்த்து 3 லட்சம் ருபாய் வழங்க வேண்டும் எனவும், தவறினால் அதற்கான பொருட்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நீதிமன்ற ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்த மேஜைகள், நாற்காலிகள், கணினிகள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்து வாகனத்தில் ஏற்றி எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



