நாகர்கோவில், ஏப். 20-
குமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைமுறைகளைத் துல்லியமாகவும், வெளிப்படையாகவும் கண்காணிக்கும் வகையில், நுண் பார்வையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் 137 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பயிற்சி முகாமில், வாக்குப்பதிவு நாளன்று நுண் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் நடத்தப்படும் மாதிரி வாக்குப்பதிவு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் சீல் வைக்கப்பட்ட உறையில் விரிவான அறிக்கையை நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் களத்தில் நுண் பார்வையாளர்களின் பங்கு மிக முக்கியமானது.
எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், மிகுந்த நடுநிலையோடும் விழிப்புணர்வோடும் பணியாற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் செயலிகள் மூலம் எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்பது குறித்தும், வாக்குச்சாவடியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது விதிமீறல்கள் நடந்தால் உடனடியாக பொது பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் முறை குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் நுண் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அவர்களுடைய பணிகள் பொறுப்புகள், செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை பற்றிய விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கலந்து கொண்டு விளக்கமளித்தார். அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



