ஈரோடு, மே 14 –
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பவானி நகராட்சிக்குட்பட்ட தேவபுரம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், அதே பகுதிகளில் செயல்பட்டு வரும் நுண் உரமாக்கும் மையத்தில் தினசரி வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை செயலாக்கம் செய்து நுண் உரமாக மாற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பவானி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிக்குளம் ஊராட்சி, விநாயகர்நகர் ரூ.13.28 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் தளத்தினை பார்வையிட்டு சாலையின் தரம், நீளம், அகலம் மற்றும் தடிமன் குறித்தும், சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் அளவு மற்றும் மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பவானி, மைலம்பாடியில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகர்கள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளின் விபரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பவானி, மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
மைலம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கல்பாவி சாலை வரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டார். தொட்டிபாளையத்தில் உள்ள நாற்றுப்பண்ணையினை பார்வையிட்டு உற்பத்தி செய்யப்படும் நாற்று வகைகள், நாற்றுகளின் வளர்ச்சி, அவற்றின் பராமரிப்பு ஆகிய செயல்பாடுகள் ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், மைலம்பாடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் 2026-27 ன் கீழ் ரூ.400 இலட்சம் மதிப்பீட்டில் கண்ணடிபாளையம் மைலம்பாடி – குப்பிச்சிபாளையம் வரை சாலை ஒரு வழித்தடத்தை இடை வழித்தடமாக அகலப்பபடுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் பெட்டி பாலம் திரும்பக் கட்டுதல், மழை நீர் வடிகால் கட்டுதல் மற்றும் தடுப்பு சுவர் கட்டுதல் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ரமேஸ் கண்ணா, பவானி, உதவிக்கோட்டப்பொறியாளர் சேகர், பவானி உதவிப்பொறியாளர் பழனிவேலு, பவானி நகராட்சி பொறியாளர் தீலிப் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிந்தனர்.



