ஈரோடு, ஜூலை 7 –
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பழைய மீன்பண்ணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் பவானிசாகரில் செயல்படும் பழைய மீன்பண்ணையானது 1954-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இப்பண்ணையில் இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதா கெண்டை நுண்மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் விரலிகள் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருடத்திற்கு 2700 இலட்சம் நுண்மீன்குஞ்சுகள் உற்பத்தியும் மற்றும் 235.00 இலட்சம் மீன்குஞ்சு விரலிகள் வளர்ப்பு செய்து வளர்ப்பு பண்ணைகளுக்கு விநியோகம் செய்யும் திறன் பெற்றுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
இப்பண்ணையில் தூண்டுதல் முறையில் நுண்மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்குஞ்சு வளர்ப்பு பணிகள் குறித்தும் இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் நுண்மீன்குஞ்சுகள் மற்றும் மீன்குஞ்சு விரலிகளை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்யப்பட்ட பண்ணைகள் மற்றும் தனியார் மீன்பண்ணைகள் பெற்று மீன்வளத்தை பெருக்கிட மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பவானிசாகர் (மண்டலம்) காசிநாதபாண்டியன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜோதிலட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.