திருப்பூர், ஆகஸ்ட் 12 –
கொங்கு வியாபாரிகள் நல சங்கத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலையோர வியாபாரிகள், மாற்றுதிறனாளிகள், கணவரை இழந்த பெண்கள், வயதானவர்கள், சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டு வாடகை வீட்டில் வசித்து கொண்டு மிகவும் ஏழ்மை நிலையில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறோம்.
மாநகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு மிகவும் குறைவான விலையில் பொருட்களை விற்று வருகிறோம். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சிறு வியாபாரம் செய்து வருகிறோம். இந்த வியாபார வாழ்வாதாரத்தை வைத்து தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம்.
வேறு சிலரின் தூண்டுதல் வெறுப்பின் காரணமாகவும், எங்களை வியாபாரம் செய்யவிடாமல் செய்ய வேண்டும் என்று சிலர் எங்களை துன்புறுத்துகிறார்கள். மத்திய அரசும், தமிழக அரசும் சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடனுதவி வழங்கி வருகிறது.
நாங்களும் அரசிடம் கடன் பெற்று வியாபாரம் செய்து கடனை அடைத்து வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் கடந்த 06.08.2025 அன்று சாலையோர வியாபாரிகள் கடையை காலி செய்ய வேண்டும் இல்லையெனில், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பினை கண்டித்து கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் நிறுவனர் காட்டன் சக்திவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



