கிருஷ்ணகிரி, செப்.04.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம்: கருக்கன்சாவடியில் அமைந்துள்ள ரிச்மேன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் மா. பிரபு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ. ரவிந்தர் வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் பள்ளி நிறுவனர் கோ.கு. மாதேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுடன் கிருஷ்ண ஜெயந்தியின் சிறப்புகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார். கிருஷ்ணரின் வாழ்க்கை, அவரது போதனைகள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் விதம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் சிறப்பு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், ஆசிரியர்கள் சத்யா, அருணா மற்றும் லோகேஷ் பிரியா ஆகியோர் ஏற்பாட்டில் “கிருஷ்ணரின் பிறப்பு” என்ற தலைப்பில் சிறப்பு நாடகம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழாவின் சிறப்பு அம்சமாக, பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மழலையர் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து விழாவில் கலந்து கொண்டனர். கிருஷ்ணர், ராதை வேடங்களில் அழகாக அலங்கரிக்கப்பட்டு வந்த குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இதனால் விழா வளாகமே கண்ணனின் பிறப்பை நினைவூட்டும் வகையில் களைகட்டியது.
நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர். விழா நிறைவில் பள்ளி துணை முதல்வர் சா. முருகேசன் நன்றி உரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் ஒருங்கிணைப்புடன் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நிறைவடைந்தது.



