ஈரோடு, செப்.1:
ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா, நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய தலைவர் சண்முகன், கல்லூரி 18-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC), தேசிய அங்கீகார வாரியம் (NBA) ஆகியவற்றின் உயரிய தரச்சான்றிதழ்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மாணவர்கள் படிப்புடன் ஆளுமை மேம்பாடு, நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுக்கத்திலும் கவனம் செலுத்தி, பெற்றோரின் கனவுகளை நனவாக்க வேண்டும் என அறிவுறுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை இயக்குனர் டாக்டர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் நந்தகோபால் வரவேற்றார். நந்தா கல்வி அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, நிர்வாக அலுவலர் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர். நிறைவில் முதலாம் ஆண்டு அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை தலைவர் முனைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.



