சென்னை, ஜூலை 08 –
தமிழக அரசு பள்ளிக்கரணை ராம்சர் சதுப்பு நிலப்பகுதியை வரையறை செய்ததில் 50 ஆண்டுகளாக இருக்கும் குடியிருப்பு பகுதிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக ரியல் எஸ்டேட்டின் கிரடாய் அமைப்பு கூறுகிறது. சதுப்பு நில பாதுகாக்கப்பட்ட பகுதியான 698 ஹெக்டக்கு வெளியே 1 கி.மீ சுற்றளவில் உள்ள நிலங்கள் மற்றும் தெளிவாக அடையாளப்படுத்தப்படாத, நில அளவை எண்கள் மூலம் இன்னும் நேரடியாக உறுதி செய்யப்படாத கூடுதல் 550 ஹெக்டேர் நிலம் ஆகியவை பிரச்சினைக்குரியாத உள்ளது.
இதன் காரணமாக 1 கி.மீ சுற்றளவிற்கு கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டா உரிமையாளர்களும், சுமார் ₹71,500 கோடி மதிப்பிலான வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிப்பு ஏற்படுகிறது. புள்ளிவிவரங்களின்படி, தோராயமாக ரூ.51,735.88 கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுக வருவாய் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொருளாதாரப் பாதிப்பு ரூ.19,790.48 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் குறைந்தபட்ச மதிப்பீடு மட்டுமே. பட்டா உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பாதிப்பு இதைவிட மிகப் பெரியதாக இருக்கலாம். மேலும், கட்டுமானத் தொழிலாளர்கள், பொருட்கள் வழங்குவோர், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், போக்குவரத்து நிறுவனங்கள், சேவை வழங்குநர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களுக்குள்ள கடமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ரியல் எஸ்டேட் துறையினர், பள்ளிக்கரணை ராம்சர் பகுதியைச் சுற்றி விதிமுறைகளை அமல்படுத்தும் போது அரசு சமநிலையான, அறிவியல் பூர்வமான மற்றும் ஆலோசனை அடிப்படையிலான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.



