நாகர்கோவில், ஜூன் 29 –
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிசிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு சார்பில் குமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மூலமாக நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். குறிப்பாக இருதய அறுவை சிகிச்சை, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்களா? உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் மருத்துவமனை வளாகத்தினை முழு சுகாதாரத்துடன் பாதுகாப்பதோடு, மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்வதோடு, சிறந்த முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிடோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.மில்லிங்டோனியா, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



