மார்த்தாண்டம், ஜூன் 4 –
களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது இந்த பள்ளியில் நிர்வாக பிரச்சனை காரணமாக வழக்கு நடந்து வருகிறது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தற்பொழுது இந்த பள்ளியில் 13 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து இந்த பள்ளியில் பணியாற்றும் 13 ஆசிரியர்களும் மற்ற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விஷயம் தெரியாமல் இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று பள்ளி திறப்பதை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திடீரென்று இன்று மாணவர்களுக்கு பள்ளி தரப்பில் தங்களுடைய மாற்றுச் சான்றிதழை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று என்ன செய்வது என்று கேள்வி கேட்ட பொழுது பள்ளி தரப்பில் டிசியை வாங்கிக் கொண்டு மாற்று பள்ளிகளுக்கு செல்லுங்கள் என இறுதி நேரத்தில் தெரிவித்தனர். இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த கலக்கத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். மேலும் பல மாணவர்கள் மலையாள மொழி பயின்று வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது மலையாள மொழி பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
இந்நிலையில் பல வருடங்களாக படித்த பள்ளியில் திடீரென மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தியதால் மாணவர்களும் மிகுந்த மன குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். பள்ளி கல்வித்துறையின் இந்த செயல்பாடு மாணவர்களையும் பெற்றோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, இது போன்று கல்வி பயிலும் மாணவர்களிடம் பொறுப்பெற்ற முறையில் கல்வித்துறை செயல்படாமல் தற்போது பள்ளிகள் திறந்துள்ள நிலையில் திடீர் என தங்கள் படித்து வரும் பள்ளி மூடப்பட்டதாக வந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளியில் சேர்க்க கூடிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என இந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


