நாகர்கோவில், செப். 29 –
நேரடி நெல் விதைப்பு வயல்களில் வால் நெல் கட்டுப்பாடு முறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 11,200 ஹெக்டர் பரப்பில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல் வயல்களை சுத்தமாக பராமரிக்காத சூழலில் பிற வகை செடிகள் மற்றும் களைகள் அதிக அளவில் வளரும். நெல் வயல்களில் குறிப்பாக நேரடியாக விதைக்கப்படும் நெல் வயல்களில் நெற்பயிர் பூக்கும் போது வால்நெல் (ஊரை) எனப்படும் களையும் நெல்லுக்கு முன்னாதாகவே பூத்து கதிராகி வயல்களிலே உதிர்ந்து விடும். மீண்டும் அடுத்த பருவத்திலும் முளைத்து பயிராகி பெரும் மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
நெல் வயல்களில் வால் நெல் பாதிப்பிற்கு நிரந்திர தீர்வு காண 26.09.2025 அன்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் வேளாண்மை துறை அதிகாரிகள் சேர்ந்து கள ஆய்வு மேற்கொண்டதில் நிபுணர் குழுவினால் பின்வரும் பரிந்துரைகள் வால் நெல் பாதிப்பினை கட்டுப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சான்று விதைகளை பயன்படுத்த வேண்டும். சேற்றுழவு செய்து மெல்லிய படலமாக தண்ணீர் கட்டுவதால் களை நெல் முளைப்புத்திறன் கட்டுப்படுத்தப்படும். நெல் பூக்கும் பருவத்தில் களை நெல்லின் கதிர்களை களை எடுத்து கட்டுப்படுத்தலாம்.
பயறுவகை பயிர்களை பயிர் சுழற்சி முறையில் பயிரிடும் போது களை நெல் பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்படும். பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டினை விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழும் போது களை நெல் விதைகள் அழிக்கப்படுவதுடன் மண்ணின் வளமும் மேம்படுத்தப்படும். வயலினை மேலோட்டமாக உழுவது மூலம் முளைத்த களைகளை அழிக்கலாம். வயலில் தண்ணீர் கட்டி களை விதைகளை முளைக்க செய்து பின்பு உழுதல். இந்த செயல்முறையை களை நெல் பாதிப்பினை பொறுத்து ஒன்று அல்லது இரண்டு முறை செய்வதன் மூலம் மண்ணில் உள்ள களை நெல் விதைகளை அழிக்கலாம்.
விதைப்பிற்கு 3 நாட்களுக்கு முன் மண் மறையுமாறு சிறிய அளவு நீர் நிறுத்தி ஆக்சிபிளுரோபென் களைகொல்லியினை ஏக்கருக்கு 80 கிராம் அளவில் 20 கிலோ உலர்ந்த மணலுடன் கலந்து தூவ வேண்டும். விதைப்பிற்கு உருளை விதைப்பான் பயன்படுத்தலாம். விதைத்த 25-30 மற்றும் 45-50 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தெரிவித்துள்ளார்.



