நாகர்கோவில், ஆக.22:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் உத்தரவிட்டார்.
குமரி மாவட்டத்தில் பறக்கை, இறச்சக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்ததால், அரசு நிர்ணயித்த விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தனியார் மில் உரிமையாளர்களிடம் நெல்லை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விவசாய பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளிடம் தொடர் புகார் அளித்தனர். இதையடுத்து புத்தளம் பகுதியில் இந்த ஆண்டுக்கான அரசு நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. மேலும் பறக்கை, தேரூர், பத்மநாபன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படத் தொடங்கின.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையின்படி மேலும் 5 இடங்கள் கண்டறியப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 25 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளதாக தெரிவித்தனர். விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி தங்களது நெல்லை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டனர்.
நெல் கொள்முதல் நிலைய திறப்பு நிகழ்ச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவகுமார், குமரி நீர்ப்பாசனத்துறை மாவட்டத் தலைவர் வின்ஸ் ஆன்றோ, மீன்வளத்துறை முன்னாள் தலைவர் சகாயம், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


