திண்டுக்கல், செப். 27 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மல்லியம்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம பொதுமக்களின் காவல் தெய்வமான முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 15-சென்ட் அளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அப்போதைய வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையிலான வருவாய்த் துறையினர் நிலத்தை அளந்து ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே நபர் கோவிலுக்கு சொந்தமான அந்த இடத்தை தனக்கு சொந்தமானது என்று கூறி அந்த இடத்தில் செட் அமைத்துக் கொண்டு அதிலுள்ள 60-க்கும் மேற்பட்ட தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை பறித்துக்கொண்டதாகவும் அப்பகுதியில் யாரையும் அனுமதிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனை தட்டிக் கேட்ட ஊர் முக்கியஸ்தர்கள் சிலரை அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் தாக்கியதாகவும் அது குறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மல்லியம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலக்கோட்டை வட்டாட்சியரை சந்தித்து புகார் அளிக்க வந்தனர். அப்போது வட்டாட்சியர் இல்லாததாலும் மற்ற அதிகாரிகளும் உரிய பதில் அளிக்காததாலும், வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது கோவிலுக்கு சொந்தமான பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பொதுமக்களை தாக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தந்த பின்பே கலைந்து செல்வோம் என போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த வட்டாட்சியர் விஜயலட்சுமி போராட்டக்காரர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.



