நாகர்கோவில், செப். 16 –
நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் நடைபெறும் ஒப்பந்த பணிகள் மாநகராட்சி ஒப்பந்த படிவத்தில் உள்ளது போல் நடைபெறாமல் ஒப்பந்ததாரர்களின் மனம் போல் நடைபெறுவதால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் பணியின் தரத்தையும், பணியையும் ஆய்வு செய்யாததால் பல லட்ச ரூபாய் இழப்பு மற்றும் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஜெயின் ஷாஜி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் மாநகராட்சியின் 23-வது வார்டுக்கு உட்பட்ட டதி பெண்கள் மேல்நிலை பள்ளி முதல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகில் உள்ள ரவுண்டணா வரை இருபுறமும் மழை நீர் வடிகால் அமைத்து நடைபாதை அமைக்க ரூ. 40,00,000 (நாற்பது லட்சம் ) மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப்பட்டு 11-04-2025ல் ஆணையர் கையொப்பத்துடன் வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன் நகல் உதவி பொறியாளர், மாநகர பொறியர் மற்றும் மாநகர நகர் நல அலுவலர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பணி 03-09-2025 அன்று மாநகராட்சி ஆணையர் உட்பட மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் மேயரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணியானது வேலை உத்தரவில் குறிப்பிட்டுள்ளது படி வேலை நடைபெறவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தை ஒட்டிய சாலையில் ஏற்கெனவே இருந்த மழை நீர் ஓடையை சீரமைக்காமல் மண் போட்டு மூடி அதன் மீது சிமெண்ட் கலவை (Concrete) கொண்டு மூடியுள்ளார்கள். இதனால் மழை காலங்களில் சாலையில் வழிந்தோடும் மழைநீர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வரும் மழை நீர், மழைநீர் ஓடையில் செல்ல வழியின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நிலை உருவாகி உள்ளது.
மேலும் மேடான பகுதியில் இருந்து வரும் மழைநீர் எழிதில் மழைநீர் வடிகாலில் வழிய அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் சரிவாக அமைக்கப்பட வேண்டும். மாநகராட்சி முறையாக திட்டமிட்டு செயல்படுத்தபாததாலும், செயல்படுத்தும் பணியை சம்மந்தப்பட்ட பொறியாளர்கள் முறையாக கண்காணிக்காததாலும் பெருமளவில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்தமட்டில் தரமில்லாத பணிகளை தொடர்ந்து செய்து மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இதனால் தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக தலையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தை ஒட்டியே வேலை உத்தவு படி வேலை செய்யாதது குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக புகார் தெரிவித்தும், பணியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடைபெறுவதை தடுக்காமல் வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு துணையாக இருக்கும் மாநகராட்சி நிர்வாக பணி ஆய்வாளர், உதவி பொறியாளர், மாநகர பொறியர் மற்றும் மாநகர நகர் நல அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வேலை உத்தரவில் குறிப்பிட்டுள்ளதை போன்று மழை நீர் வடிகாலில் மண் கொண்டு மூடி போடப்பட்டுள்ள சிமெண்ட் கலவையை (Concrete) உடனடியாக அகற்றிவிட்டு மழைநீர் வடிகாலை, மழைநீர் செல்ல தடையின்றி சீரமைத்து அதன்பிறகு நடைபாதை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



