நாகர்கோவில், ஏப். 17 –
குமரி மாவட்ட அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் சுயஉதவிக்குழுவினர் இணைந்து சோளம், கம்பு, ராகி, நெல், கோதுமை, சிறுபருப்பு, பாசிப்பயறு, துவரை, உளுந்து, கொள்ளு, கடலை, மொச்சை, சவ்வரிசி, புளியமுத்து, வற்றல், அன்னாசிபழம், மாம்பழம், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, தர்பூசணி, பலாபழம், மாங்காய், தக்காளி, கேரட், எலுமிச்சை பழம், வெண்டைக்காய், கத்தரி, நெல்லிக்காய், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள், லோகோ, பாதகைகள், தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் அலுவலர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக பட்டாம்பூச்சி வடிவில் வாக்காளர் உதவி எண், நவதானியங்களால் வடிவமைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், சிவிஜில் செயலி, நீரின்றி மீன் வாழாது வாக்கின்றி ஜனநாயகம் வளராது என்ற விழிப்புணர்வு வாசகம், காய்கனிகளால் உருவாக்க இந்திய வரைபடம், அன்னாசி பழத்தால் உருவாக்கப்பட்ட 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் உள்ளிட்டவை அனைவரின் கண்களையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் மனிஷா சென்டியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மகளிர் சுய உதவி குழுவினர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



