நாகர்கோவில், பிப். 26 –
நாகர்கோவில் அருகே பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை மகன் ராஜ்குமார் (30). டிரைவரான இவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். ராஜ்குமார் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் குடும்பத்தோடு தங்கி வேலை பார்த்து வந்தார். பின்னர் மனைவி பிள்ளைகளுடன் நாகர்கோவில் வந்து இங்கு வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே ராஜ்குமார் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன்பு அவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


