திருப்பத்தூர்:டிச:20,
அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல் போராட்டத்தின் போது வேலூர் மண்டல செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் கண்டன உரை ஆற்றுகையில்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை இயற்றிய அண்ணல் அம்பேத்கரை அவமதிப்பு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மேலும் நாடாளுமன்றத்திலும், பொதுமக்களிடையே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக போராடி தியாகம் செய்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய வரை, ” இப்போதெல்லாம் அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வது பேசனாகிவிட்டது! அவர் பெயரை கூறுவதை விட்டுவிட்டு கடவுளை வணங்கினால் புண்ணியமாவது கிடைக்கும்! என்று பேசியது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த சமூக மக்களின் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விதமாக பேசியது கண்டனத்திற்குரியது. அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதை நாடாளுமன்ற அவையில் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தில் அம்பேத்கரை உள்வாங்கியுள்ள அனைவரும் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பலைகள் இருந்து வரும் சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முழுவதும் மண்டல, மாவட்ட அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என பேசினார். இப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கலா மோகன், நகர செயலாளர் ஆனந்தன், கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர்கள் எ.ஜெ. சக்தி, அண்ணாமலை, ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் இரா. சங்கர், மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் கோகுல், மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்திபன், திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் திருமா விமல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தி.ஜெ. சசிகுமார்,பழனி, கந்திலி முன்னாள் ஒன்றிய செயலாளர் நந்தகுமார், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நகர செயலாளர் விக்கி, கந்திலி ஒன்றிய இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் இரா. விக்னேஷ் மற்றும் கட்சியின் நகர ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.



