நாகர்கோவில், அக்டோபர் 30 –
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சிறார்கள் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது.
இது தவிர அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 164 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 39 நாட்களில் மட்டும் 37 சிறார்கள் வாகனங்கள் ஓட்டியதாக அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவருக்கு ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


