நாகர்கோவில், செப். 24 –
தோவாளை பாசன கால்வாயில் தூவச்சி என்ற இடத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட கசிவை சரி செய்வதாக காரணம் காட்டி அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து பாசனம் நடைபெறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் விவசாயிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமலும் தகவல் தெரிவிக்காமலும் சானலை உடைத்து அதிகாரிகளும் ஒப்பந்ததாரரும் வேலை செய்தனர். தண்ணீர் அடைப்பு காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வேலை செய்வதற்கு பதில் நாற்றுக்கள் நட்ட பிறகு வேலை ஆரம்பித்ததால் தோவாளை சேனலில் தண்ணீர் கிடைக்காமல் நெல் உட்பட அனைத்து விதமான பயர்களும் கருகின.
ஆகவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் உட்பட பல தரப்பினரும் தொடர் போராட்டங்கள் நடத்தினர். அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறினர். அதிகாரிகள் நடத்திய பல்வேறு கூட்டங்களிலும் இழப்பீடு கேட்டு கோரிக்கை விடுத்தனர். பத்திரிகைகள் உட்பட அனைத்து மீடியாக்களிலும் பல முறை செய்திகள் வெளியாகின. ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை.
ஆகவே, பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ ஏற்பாட்டின் பேரில் – தோவாளை சேனல் பகிர்மான குழு தலைவர் ஞான ஜேசு அந்தோணி தலைமையில் தோவாளை சேனல் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் ஜெனில் சிங், இளங்கோ, செல்வமணி, விஜயேந்திரன், சேகர் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தவறு செய்த அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்த போது விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவே கூடாது என்பதற்காகவும் – தவறு செய்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் விவசாயிகளுக்கு எதிராக அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் பாசனத்துறை நிர்வாகிகள் தரப்பில் , உரிய ஆதாரங்களுடன், தகவல் அறியும் சட்டத்தில் பெறப்பட்ட ஆவணங்களையும், பத்திரிகை செய்திகளையும், ஊடக ஆவணங்களையும் தாக்கல் செய்திருந்தனர்.
ஆகவே, விவசாயிகளினுடைய நிலைமையை கனிவோடு பரிசீலித்த உயர்நீதிமன்றம் 4 மாதத்திற்குள் சென்னை அரசு செயலர் இதனை விசாரணை செய்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அதிகாரிகளிடமிருந்து உரிய அறிக்கை பெற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சி.டி பெருமாள் ஆஜராகி வாதாடினார். அதிகாரிகளிடம் கிடைக்காத நியாயம் – மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் இதற்கு முயற்சி எடுத்த பாசனத்துறை நிர்வாகிகளை பாராட்டினர்.


