திருப்புவனம், அக்டோபர் 14 –
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக பிரமுகர் ஒருவர் தொப்புள்கொடி உறவான பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி என ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் தலை நிமிர தமிழனின் சுற்றுப்பயனம் என்ற பெயரில் நேற்று மதுரையிலிருந்து தனது பிரச்சார சுற்று பயனத்தை பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் துவங்கியுள்ளார். இதனையடுத்து முதலாவதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அதிமுக, பா.ஜ.க கூட்டனியை உறுதி செய்துள்ள நிலையில் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரனி துணைச் செயலாளர் மணிமாறன் என்பவர் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் “மக்கள் விரும்பும் மகத்தான தலைவர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியை அமைக்க சபதம் ஏற்ற எங்கள் தொப்புள்கொடி உறவான பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக நன்றிகள்” என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளார். இது அதிமுக மற்றும் பா.ஜ.க தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதுடன் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



