நோயாளிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தேவை
ராமநாதபுரம், செப். 1:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பேரூரில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இம்மருத்துவமனைக்கு அருகிலும், பழைய காவல் நிலையத்தின் பின்புறத்திலும் அமைந்துள்ள பழைய காவலர் குடியிருப்பு கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தை சிலர் இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு வரும் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக தமுமுக செயலாளர் பரக்கத் அலி தெரிவித்துள்ளார். மேலும், கட்டிடத்தை சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாகவும், இது நோயாளிகளின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, அபாயகரமான பழைய கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தில் மருத்துவமனைக்கு தேவையான புதிய கட்டடங்களை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் பரக்கத் அலி வலியுறுத்தியுள்ளார்.



