ராமநாதபுரம், செப். 10 –
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித் திறன் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. மாணவர்கள் நலன் கருதி உடனடியாக தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர் தமுமுக மாநில செயலாளர் சாதி பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தொண்டி அதை சுற்றி பல்வேறு கிராமங்கள் ஏழை எளிய மக்கள் விவசாயிகள், மீனவர்கள், சிறுபான்மை மக்கள் நிறைந்த பகுதி மக்கள் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் 1946ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சையது முகம்மது கான் சாகிப் இப்பள்ளியை துவக்கினார். இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகவும் பயனடைந்தனர்.
அதனை தொடர்ந்து அவரது மகன் அமானுல்லா 1951 ஆம் ஆண்டு தரமான வகுப்பறை கட்டிடங்களுடன் சுமார் 13 ஏக்கர் பரப்பளவை கொண்ட இடத்தை செய்யது முகமது உயர்நிலைப் பள்ளியை மேம்படுத்த அரசுக்கு தானமாக வழங்கினார். சென்ற ஆண்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தானமாக வழங்கிய குடும்ப உறுப்பினர்களை அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இங்கு கல்வி பயின்ற பலர் சிறந்த எழுத்தாளராகவும் நீதிபதிகளாகவும் டாக்டர்கள் இன்ஜினியர்கள் ஆசிரியர் உள்ளிட்ட உயர் பதவியை வகுத்து வருகின்றனர். இந்த பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஏராளமான மாணவர்கள் பயனடைந்தது வருகின்றனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக இப்பள்ளி கல்வி தரம் உயர்ந்து மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் சிறப்பாக இருந்தன. தற்போது சில நாட்களுக்கு முன்பு எட்டு ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் உட்பட இடமாற்றம் செய்யப்பட்டனர். ஒரே நேரத்தில் அதிகமான ஆசிரியர்கள் இடமாற்றம் செய்து இங்கு காலி பணியிடம் ஆனதால் மாணவர்களின் கல்விதிறன் மிகவும் பாதிப்படைந்து விட்டது. தற்போது தலைமை ஆசிரியர் இப்பள்ளிக்கு வந்திருக்கிறார். ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
அதுமட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய மைதானம் தொண்டியில் தான் இருக்கிறது. ஆனால் போதிய பராமரிப்பு இன்றி கருவேல மரங்கள் மண்டி நிற்கிறது. இதனால் மாணவர்கள் விளையாட ஏற்ற சூழல் இல்லை. மாணவர்கள் சுகாதாரமாக இருக்க தேவையான கழிப்பறை வசதிகளும் இல்லை. கழிப்பறை கட்டப்பட்டும் பல நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் அவலம். இப்பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வர் கோப்பைக்கான போட்டியிலும் இன்னும் பல்வேறு போட்டிகள் மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆனால் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால் விளையாட்டில் அடுத்த கட்ட நிலைக்கு செல்ல முடியவில்லை.
இப்பள்ளி மாணவர்களின் நலக்கருதி தேவையான ஆசிரியர்கள் நியமித்தும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமித்தும் பள்ளி மைதானத்தை மேம்படுத்தி பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பின் தங்கிய வரலாற்று சிறப்புமிக்க தொண்டி பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இப்பள்ளி மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.


