தருமபுரி, ஜூலை 08 –
தருமபுரி அருகே உள்ள தேங்காய் மரத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (31). இவர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவன ஊழியர். இவர் நகை கடையில் பணிபுரிந்து வரும் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் சின்னசாமியுடன் பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தருமபுரியில் உள்ள நகைக்கடையில் பணியை முடித்து வீட்டுக்கு திரும்பிய அந்தப் பெண் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சின்னசாமி கையில் வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டார். பின்னர் அங்கிருந்து ஓட முயன்றார்.
இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சின்னசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அந்தப் பெண்ணை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் அங்கு சென்று சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் சின்னசாமியும் காயம் அடைந்ததால் அவரை காவல்துறையினர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



