சுசீந்திரம், ஜூன் 29 –
தமிழ்நாட்டில் வனப் பரப்பை அதிகப்படுத்தி பசுமை போர்வையை விரிவுபடுத்தும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும் அப்பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால் அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவதை ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள், ஆற்றுப்படுகைகள் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ளூர் மர வகைகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி தேரூர் பேரூராட்சி பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
அதன்படி தேரூர் பேரூராட்சி சுசீந்திரம் வெள்ளமடம் சாலையில் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர சுப்பிரமணியன் அவர்களால் நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டது. தேரூர் பேரூராட்சி மூலம் சுசீந்திரம் வெள்ளமடம் சாலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரோட்டின் இருபுறமும் நடப்பட்ட புங்கன் மரக்கன்றுகள் தற்போது வளர்ந்து பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இதுபோல எல்லா பேரூராட்சிகளிலும் மரக்கன்றுகளை நட்டு கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



