தேனி, ஜூன் 16 –
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து இரு போக விவசாயத்திற்கு முதல் போக பாசனத்திற்காக அணையில் இருந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரின் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.சரவணன்,
ஆகியோர் முன்னிலையில் தண்ணீரை திறந்து வைத்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசனப் பகுதியில் முதல் போக பாசன பரப்பான சுமார் 45,041 ஏக்கர் நிலங்களுக்கு விநாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 6,739 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்வின் போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்),கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) ஆகியோர் உட்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.