தூத்துக்குடி, ஆக.29.
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், சமீபத்தில் அதிமுக மற்றும் திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர், தங்களது இருக்கைகளில் அமராமல் எழுந்து நின்றபடி கேள்விகளை எழுப்பினர். அவர்களை இருக்கையில் அமருமாறு மேயரும் ஆணையரும் கேட்டுக்கொண்ட போதிலும், இருவரும் அதனை ஏற்காமல் மேயரின் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சண்முகையா தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களில், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை இடம்பெறச் செய்யாமல் அமைச்சர் மதன் ராஜாவின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், “யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்கிறார்கள்? அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “அமைச்சர் தரப்பில் இருந்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் தேவையில்லாமல் பிரச்சினைகள் செய்யப்படுகின்றன” என மன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள், தவெக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து, தவெக கவுன்சிலர்களான மந்திரமூர்த்தி மற்றும் ராமர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களுக்கு இடையேயான மோதலால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



