மார்த்தாண்டம், அக். 4 –
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் நேற்று திற்பரப்பு அருவிக்கு சென்று குடும்பத்துடன் அங்கு அருகில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த 17 வயது மாணவியும் அருவியில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்த மாணவியை திடீரென கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டு கத்தினார். அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் சென்று சுற்றுலா பயணிகளிடம் இருந்து வாலிபரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில் வாலிபர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம் (32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது. மாணவியை பார்த்து பின் தொடர்ந்து அவர் குளித்துக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை அளித்ததாக விசாரணையில் கூறினார். பாலியல் தொல்லை சம்பவம் என்பதால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


